Monday, October 11, 2010

கூகுளில் தொலைந்தவள்

தலைப்பிரட்டைகள் தம்மை மீன்களல்ல 
என்று நம்பத்துவங்க.. 
வேண்டி இருக்கிறது ஒரு பருவத்தின் 
முந்தி விந்து விடும் ஆகாசம் 

மைக்ரேன் தலையர்களின் தியானம் 
மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு 

பாலித்தீன் பைகளுக்குள் அடரத்துவங்கிய 
வேர்கள், கால் நுகர்ந்து பின்தொடரும் நாய்குட்டிகள் 
மீட்பனோ எண்ணழிந்த ரிமொட்டின் பொத்தானாய் 

சேவற் கொண்டைப் பூக்கள் காத்திருக்கின்றன 
அடுத்த மரணத்திற்கு காத்திருக்கும் வெட்டியானின் 
சாராய புட்டியென., 

தன்னை வதைத்துக் கொள்ளும் மனப் பிறழ்வுற்ற 
பெண்ணின் பேரோலம் உலுக்கி விழிப்பைத் திணிக்கிறது 
விரல் சுவைத்து உறங்கும் மகவில் 

சில தகனங்களுக்கு தேர் வருவதில்லை 
உன் ஆன்மா அமர நாளிலேனும் அமைதியுறட்டும்

Saturday, October 9, 2010

வெளியேற்றம்

ஒரு கருக்கலைந்த கவிதை 
பாதரசம் கூடுவதைப் போல் உயிர்த்தெழலாம் 
கொலைக்குத் தகுதியான நட்பின் துரோகத்தை மன்னிக்கலாம் 
உறங்கும் குழந்தையின் 
தொட்டில் கடந்து நீண்டிருக்கும் கால்கள் வழி பால்வீதி கடக்கலாம் 
கலவியில் தோற்றுக் கிடக்கும் கணவனின் 
நெற்றிதடவி குழல் கோதலாம் 
ஒரு துறவியின் காத்திருந்த மரணத்தைக் கொண்டாடலாம் 
பிசாசின் காமத்துடன் கடவுளுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் 

நுழையும் போது

மழை

காளான் குடைக்குள் ஒடுங்கிக் கொள்ள முடிகிறது 
இரவு நேர வெளிச்ச ஜன்னல்களுடன் மரவட்டை ரயில் 

முன்னறிவிக்க ஆகாசம் பார்த்துக் குலைத்த நாய் 
மயில் .. கடைசியாய் தென்காசிப் பக்கம் பார்த்தது 

கடலை சல்லித்துக் கொண்டிருக்கிறாள் 
ஆயிரம் கண்ணுடைய தேவதை 

தகப்பனுடன் நனைந்து கொண்டிருக்கிறாள் 
அருவியின் கூச்சலுடன் மொட்டை மாடியில் அதே சாதி 
தேவதா 

மடி மட்டும் நனையாமல் இருக்கிறது சுவரொடுங்கி 
சுருங்கிய இமையசைக்கும் நகரத்து பசுக்கள் 

கழுவ கழுவ திரவப்பொட்டுகள் கார் கண்ணாடியிலும் 
இன்னுமொரு தலையணை காலியாகவே மாதம் பல கிடக்கும் 
படுக்கையிலும்

Tuesday, October 5, 2010

குழியேகும் எறும்புகள்

தகனச் சாமத்தில் அழுகை தீர்ந்து


உறங்கும் மகளை எழுப்புகிற நாயின் ஊளை

படர்த்தும் நடுக்கத்திற்கு

எரியும் ஒற்றை விளக்கு அணையாமல்

திரவமூற்றும் கரம்

வேண்டியிருக்கிறது ஒரு மெல்லிய

அணைப்பிற்காக



தீராச் சமர்களின் விரை தீர்ந்த ஆயுதங்கள்

தலைதிருப்பப்படும் மௌனம்

மகுடிகளைப் போல் இயக்குகிறது

பிடாரனனின் காலடி அதிர்வுடன்



கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது

துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்

முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை

குழியேகும் எறும்புகள்



பிண்டத்துண்டங்களுடன் வெளியேறும்

உதிரத்தின் கவிச்சை தாள

இயலாததாய் இருக்கிறது

சுகித்த பாகங்களை அறுத்தெறியும்

கசப்புடன்