Monday, August 29, 2011

மத்தகம்

மத்தகத்தின் மீது பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிக்கு பெயர் வெட்கம்

அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால்
பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது
மரணத்தை

வாலுயர்த்தி வானம் சுட்டி
கோளம் கொறித்து
உலகம் விழுங்க முயல்கிறது
அணில்

காகப் பொன் மினுங்க
கிடக்கும் வண்டல்
மீது அமர்கிறது தட்டான்
சிறகு தாழ்த்தி

தம் பருவத்தை
தானுணர்தல் ஆணுக்கு
வாய்ப்பதில்லை
ஒரு சிறுமியைப் போலே
அத்துணை நுட்பமாய்

(தான் பருவமெய்திய நாளை,நாழிகையை நினைவிறுத்தி மெதுவெப்பம் படரச் சொல்கிற மனைவி போல் சொல்லத் தெரியாத கணத்தின் சொல் வளர்த்த கிளை இக்கவிதை(?) )

Sunday, August 14, 2011

கிகலோவின் டைரிக் குறிப்புகள்

புனித நரகத்தை உழுத போது
கிடைத்த வெட்டு பட்ட நாணயம்
பூவிழுந்த உன் கருவிழி

*****************
நண்பனை புதைத்த நாளில்
அழிந்தது கரு வாசனை
நல்ல தவளையானேன்

**********************
சுண்டிய உதிரம்
நிரம்பியிருக்கும் ஆஷ்ட்ரேயில்
வெட்டிய நகம் போல்
உதிர்ந்து கிடக்கிறது
நாளை -மறு -நாள் இரவுக்கு
நிரல் செய்த வாடிக்கையாள
எண்ணெழுதிய காகிதம்
*********************
வீட்டுத் தேனீக்கள்
சேமித்துக் கொண்டே இருக்கின்றன
எச்சிலை விரும்பி உண்ணும்
உதடுகளுக்காக

*********************