Monday, September 27, 2010

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

விருந்தினள் உடுப்பிலிருந்து


உதிர்ந்து விட்டிருக்கும் பொத்தான்

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்



தற்கொலைக்குத் திட்டமிடுவதைப் போல்

படுக்கை விரிப்புகளை நீவிக் கொண்டிருக்கும்

கரத்தின் நடுக்கம்

சிறகசைக்காமல் நடந்து பழகாத பறவையின்

கால்கள்



செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும்

நாய்கள் தம் நகங்களில்

உதடுகளுக்குரிய பற்களைக் கொண்டிருக்கின்றன



மீண்டும் பொருத்த முடியாத கரத்தினைப்

போன்றதல்ல

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

15 comments:

வினோ said...

திரும்ப வைக்க முடியாத சொல்லும் திரும்ப போக முடியாத தருணமும் இப்படி தான் நாய்களுக்கு இரையாகின்ற..

chandra said...

mika sirappaka irukkirathu nesamithran.

chandra said...

mika sirappana kavithai nesamithran

Unknown said...

அண்ணே உங்கள் கவிதையில் எப்படி இத்தனை பிழைகள்...?

ஆனால் அந்த திருப்ப முடியாத வார்த்தை நிஜம் ...

நேசமித்ரன் said...

நன்றி வினோ ,மீளாத சிறகு ஆகாசம் ஏகுதலாக

நன்றி சந்திரா. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் . மகிழ்வு

கே.ஆர்.பி . நன்றி .பிழைகள் சுட்டுங்களேன் :)

anujanya said...

நல்லா இருக்கு நேசன். எனக்கே புரியவும் செய்கிறது சற்று அதிசயமாக :)

அனுஜன்யா

Raju said...

எப்டி இப்டி..?

ஹேமா said...

உடைந்த கரத்தைப் பொருத்தினாலும் கொட்டிவிட்ட சொற்களை அள்ளமுடியாது !

அன்புடன் அருணா said...

/சிறகசைக்காமல் நடந்து பழகாத பறவையின்

கால்கள் /
ரொம்பப் பிடித்தது!

vasu balaji said...

ரொம்ப நல்லா வந்திருக்கு நேசன். தமிழ்மணம் பட்டியை இண்ட்லி அருகில் கொண்டு வாருங்கள். மேலிருப்பதால் வாக்களிக்க முடிவதில்லை பலருக்கும்.

rajasundararajan said...

சொற்கள் மூளைச் செயற்பாட்டின் புறப்பாடு ஆகையால், பொதுவாக, தாமே உதிர்வனதாம். ஆனால், //எடுத்த இடத்தில் வைக்கமுடியாத சொல்// என்றதினால், ‘எடுத்தல்’ வினைக்கு உரியதோர் எழுவாய் புரிதலுக்குள் வருகிறது. இருக்க, //விருந்தினள் உடுப்பிலிருந்து உதிர்ந்துவிட்டிருக்கும் பொத்தான்// என்றதில் ‘உதிர்தல்’ என்னும் தன்வினை வடிவம் இடம்பெறுகிறது. இதனால் இவ்விடத்தில் சொல்மட்டப் பொருள் (verbal level meaning) சற்றே இடறுகிறது. உதிர்ந்துவிட்ட பொத்தானை மேசைக்கு அடியில்/ கட்டில் விரிப்பில் இருந்து எடுக்க நேர்ந்தால் அதை அதே இடத்தில் மீண்டும் வைக்க முடியாதா?

கவிதை வெளிப்பாட்டை இப்படி நேரடியாகவா பொருள்கொள்வார்கள் என்று வினவினால், முதல் வாசிப்பு அப்படித்தான் நிகழும். வாசக மண்டைக்குள் உள்ள இலக்கண இறுக்கத்தைத் தளர்த்த/ பிரித்து மேய, கவிஞர் உத்திகளைக் கையாள்வது வழக்கம்:

//செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும்
நாய்கள் தம் நகங்களில்
உதடுகளுக்குரிய பற்களைக் கொண்டிருக்கின்றன//

சொல்மட்டப் பொருள் இடறுவதாக எனக்குத் தோன்றும் இன்னொன்று: //மீண்டும் பொருத்த முடியாத கரம்//. ஏன் பொருத்த முடியாது என்று, அறிவியலால் வசக்கப்பட்ட என் மூளை வினவுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘Impossible to fix back’ என்றுணர்த்துவதானால், ‘மீண்டும் பொருத்த முடியாமற் போன கரம்’ என்று வரவேண்டுமா என்பதைக் கவிஞர்தான் முடிவுசெய்ய வேண்டும். அல்லது ‘அப்படி இல்லை இப்படி’ என்று எங்களுக்கு விளக்கித் தந்துவிட்டால் தாழ்விலை.

நேசமித்ரன் said...

அனுஜன்யா

ஆஹா எவ்ளோ நாள் ஆச்சு ? நன்றி கவிஞரே .மறுபடி வாங்க ப்ளீஸ்

ராஜூ


வாங்க . நன்றி நண்பா


ஹேமா

மெய்தான். நன்றி

அன்புடன் அருணா

ரொம்ப சந்தோஷமும் நன்றியும்

பாலா சார்

மிக்க நன்றி !உங்கள் மெயிலுக்கும் வருகைக்கும்

மாற்றிவிட்டேன்

நேசமித்ரன் said...

ராஜசுந்தரராஜன் அண்ணா வாங்க!

விருந்தினள் இருந்தவள். விருந்து முடிந்து சென்று விட்டாள்.கண்டெடுத்தாலும் பயனிலை .பிறிதொரு நாள் கேள்விக்குரியதாக ஆகலாம்தானே ?

விபத்தில் வெட்டுண்ட கரம் தாமதிப்பால் பொருத்த முடியாமற் போவதுண்டு

உங்களுக்குத் தெரியாதா அண்ணே சொல் என்பது சொல்லா ?:)

இந்தப் பாடலுக்கு மலேசியா வாசுதேவனின் பிசிறடிக்கும் குரல் வேண்டியிருந்தது அண்ணா
சுருதி விலகல் இருப்பின் பொறுத்தருள்க !

கமலேஷ் said...

என் அலகால் கிழிக்க முடியாத சருமம் தடித்த
உடலென கிடக்கிறது
நீங்கள் வேட்டையாடி கொண்டு வரும் இரை.
இயல்பாய் ராஜ கழுகுக்காக காத்திருப்பேன்...
இன்று உங்களின் நகம் பட்டே திறக்கிறது ஊன்.

விருந்தினள் - ஓ இறந்த காலமா, நான் பெண்பால் என்று முயற்சித்து தோற்றேன்.

இப்போது வரிகள் திறக்க உற்றுப் பார்க்கிறேன்.
என் கை நிறைய உதிர்ந்த பொத்தான்கள்.
திடுகிட்டவனாய் முடிந்த வரை அதை
வலுவாய் காற்றில் வீசி எறிகிறேன்.
மீள முடியாத காலத்துக்குள் போகமுடியாத அது
மீண்டும் மீண்டும் என் கைகளுக்கு திரும்பிய படியே இருக்கிறது.

உதிர்ந்த பொத்தான்களை, சொற்களை, கணங்களை,இன்ன பிறவுமாய்
என்முகத்தில் வீசி வீசியெறிந்து
விளையாடியபடியேஇருக்கிறது
இந்த கவிதையும்

rajasundararajan said...

நன்றி. ஆனால் நான் ஒன்றும் பொருட்குற்றம் கண்டு கூறவில்லையே?

Post a Comment