Thursday, April 14, 2011

அக்கா...!

          இன்று நெருங்கிய உறவினரின் மரணம் நிகழ்ந்தது.அக்கா ,அக்கா என்று சுற்றிச் சுற்றி அதே நினைவு.மயானம் வரை வசமிழந்த கண்கள் .வெகு உற்சாகமாக துவங்கிய நாள் பேரதிர்ச்சியுடன் முடிந்தது 38 வயதெல்லாம் சாகும் வயதா :(

            2ஆம் ஆண்டு பொறியியல் பயிலும் அவர் மகனை அழச் சொல்லிக் கெஞ்சினேன் ,வெறித்த பார்வையுடன் மாலை வரை துளிக் கண்ணீரும் சிந்தாமல் கிடந்தவன் தன் பால்ய சிநேகிதன் வந்து நம்ம அம்மாவுக்கு என்னடா ஆச்சு என்றதும்... வெடித்து உடைந்தான்.மிக மோசமான பாதுகாப்பின்மையை மரணங்கள் மனிதரிடையே பரவ விடுகின்றன,இனி சகலரையும் நேசிக்க மட்டுமே வேண்டும் என்றும்

                       பெருவெளியில் நிரந்தரமாக கலந்து விட்டது இன்னொரு வெளிமூச்சு,எல்லா தத்துவங்களும் அத்துணை தேற்றுதல்களும் ஒரு விசும்பலில் துகள்களாகித் தெறிபடுகின்றன.தன் முன்னிருந்த அத்துணை சாத்தியங்களையும் முயன்று வெற்றுடலை சுமந்து வந்த அந்த மனிதன் ஒரே இரவில் தொழிலால் 65 லட்சம் இழந்தவன்,தொடர்ந்த வருடங்களில் தகப்பனையும் தாயையும் ...4-5 வருடங்களுக்குள் அத்தனையும் .. இனி அந்த வீட்டில் பகல்களில் வரும் பூனைகள்... முதல் கவளச் சோறுண்ண வரும் மொட்டைமாடி காகங்கள்... அந்த தென்னை மரத்தின் கீழ் சிதறிய பருக்கைகளுக்கு வரும் அணில்... எம்புட்டு தின்னுரப் போகுதுக .வெரட்டாத ஆத்தா என்று காயும் தானியங்களுக்கு வரும் குருவிகளுக்கு யார் கொள்ளுவார் கரிசனம்...

               சாப்பிடும் பொழுதுவரை பேச்சை நகர்த்தும் லாவகம் அறிந்திருந்தாய் அக்கா . உனக்கு மட்டுமே தயாரித்து ஒரே பாண்டத்துடன் தீர்ந்து போனாற் போன்ற வேறெங்கும் காணா குட்டிக்குட்டி கிண்ணங்கள்.எப்போது மோர் வரும் என்று காத்திருக்க வைக்கும் வீடு உனது.உணவை இத்துணை நேசித்துப் பரிமாறும் வீடுகள் அரிதினும் அரிது அக்கா.எனக்கு நீதான் பெண்பார்த்தாய் .இந்த மரணம் உன் வாதைகளில் இருந்து நீ கொண்ட விடுதலை என்பதில் ஒரு மெல்லிய ஆசுவாசம் படரத்தான் செய்கிறது.இறந்த தம்பியின் மனைவிக்கு தாயின் இடத்தில் இத்துணை வருடங்களுக்குப் பின்னும் நீண்டபடிதான் இருந்தது கரம் அந்த சிறுமிக்கான நகைகளை சேமிக்கத் துவங்கி இருந்தாய்.ஒவ்வொரு முறை அயல்தேசம் கிளம்பும்போதும் வரும்போதும் சொல்லிக் கொள்ள எடுத்துக் கொள்ள உன் வீட்டு வாகனம் நின்று கொண்டிருக்கும். அக்கா ... இடம் மாற்றும் போது சுமக்க நேர்ந்திருக்க வேண்டாம் அக்கா.உன் முகம் இது வரை பார்த்தே இராத சௌந்தர்யப் புன்னகையுடன் ஒளிர்ந்தது.என் கவிதைப் புத்தகத்தை நீ வாங்கிப் போன அந்த மாலையில் மீண்டும் உன் கண்களில் பால்யத்தை பார்த்ததைப் போலவே ...

          ஒவ்வொரு வருகையிலும் என் வீட்டு பதனப் பெட்டியை நிரப்பிப் போவதில் துவங்கி என் வரவறிந்து சமைத்தனுப்பும் நாட்களும் இனி ....
உனது வாக்கியங்களை அப்படியாமே ? என்று துவங்கும் லாவகம்.. பிறகு என்று உரையாடலை நீட்டுவிக்கும் சொல்லோடு நீ தரும் மௌனம் ... எங்களுக்கும் விளங்குற மாதிரி அடுத்து வர்ற புஸ்தகம் இருக்கணும் .சரியா .. ? என்று கேட்ட குரலின் தண்மையும் ஒரு புறம் சாய்ந்த பார்வையும் .அக்கா ! உன் மகனிடத்து வாக்களித்ததைப் போலவே அவனது தேவைகளில் என் இருப்பு நிச்சயம் இருக்கும்.இனியான என் சொற்களில் நின் நினைவுகளும்

            அழுது வீங்கிய கண்களுடன் அடர்ந்த கனவில் இருந்து அக்கா,இப்போ அக்கா என்கிற என் மனையாளின் சிலிர்த்து விழித்த நிமிடம்தான் அக்கா நீ விட்டுப் போயிருப்பது,நீ இல்லாத வீட்டிற்குள்  நுழையும் திராணி குறித்த என் நடுக்கமும்.உன் வீட்டில் இருக்கும் உன் மகனின் இரவுணவு முடிந்ததென்ற சேதி சொல்லும் என் அம்மாவின் அன்பும் ..நீர்த்திரை கட்டும் இந்த கண்கள் எழுத விடாமல் இம்சிக்கின்றன அக்கா.சிறு வயதில் நீ ஒளிந்து கொண்டால் மட்டும் கண்டு பிடிக்க முடிந்ததே இல்லை அக்கா.நீ போர்வை போர்த்தி கட்டிலுக்கு கீழ் அல்லது உறங்கும் யாரேனும் அருகில் இருப்பாய்.கண்டறிய இயலாமலே முடிந்து விடும் விளையாட்டு,இன்றும்.....

உன் ஆன்மா அமைதியில் ஆழ்க!நீ ஸ்தூலமாய் வாசிக்கக் கூடும் என்ற அசட்டு நம்பிக்கையுடன்...

7 comments:

ஹேமா said...

அக்காவை அப்படியே முன் நிறுத்தி மனசைக் கனக்க வைத்துவிட்டீர்கள் நேசன்.அமைதியடையட்டும் அவரது ஆத்மா.பிரார்த்திப்போம் !

iniyavan said...

மனசு கஷ்டமாயிடுச்சு சார். படிக்கவே முடியலை. அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

rvelkannan said...

ஆழ்ந்த வருத்தங்கள் :-((

ரோகிணிசிவா said...

RIP

Sugirtha said...

:-(

ஓலை said...

Sad. Heartfelt condolences Nesan.

இரசிகை said...

:(

Post a Comment