Thursday, July 29, 2010

முத்த மீந்த மிடறுகள் -1

( I )

திசை பத்தும் மடங்கி நினதொரு சேலையின் முன்னிடை சொருகு மடிப்பாய் முடிந்துலவும் தருக்கு மிக உலவுகிறாய் அடை மிகுந்து கசியும் திரவமென பேருன்னதம் ஈந்து. பெயர் தொலைந்து பால் திரிந்து பெண்ணுமாகி நிதம் பெருகும் உதிரம் நிரம்பிய பையுடன் திரிகிறேன் நீ வீடேகுகையில் மையச் சாலையின் மது விடுதி முன் துவங்கி விட்ட உதிரத்திறப்பாய்.உறவுள  குழந்தையை ஆரத் தழுவி தூக்கக் கூசியக் கரம் மட்டும் வாய்க்கவில்லை எனக்கு, மஜ்ஜை வரை என் சுடு உதிரத்தின் உஷ்ணம் பரவ இறுக்கிக் கொள்ளும் வதையின் இறுமாப்பு... இணக்கம் யாசித்து யவ்வனம்  திமிரத் திமிர நிற்கிறது 
தீபகர்ப்பப் பொலிவுடன்

முட்டைகள் தீர்ந்த பருவத்தில் பெருந்தனத்தின் திசுக்கள் தாழ்ந்த கருவம் அழியும் தருணத்தில் என் வினையெச்சம் தீர்ந்து நீர்க்கும்,   தாபங்கள் தழுவலாய் தட்டையாகும். அவுரோகண இருதயத்தின் துடிப்பிசையில் ஆகாச ஓசோன் போலல்ல, கருந்துளைப் பரிதி போலுமன்று....  விசும்பைப் போல் விக்கல் மின்னலொடு நிலமேயுன் நீரோட்டம் புலம் கடந்து பூப்பெய்தியபடி இருக்கும் பிரியத்தின் புறத்தண்டு வளந்தபின்னும் நாணேற்றும்.

( II )

உன்னதா..!தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ செய்யும் கொடுவதையில் கசியும் உதிரம்.ஆட்டை அறுத்து தோல் உரித்து பாகம் பாகமாக வெட்டி விற்றுவிட்டு கடை மூடி திருஷ்டி கழிய வாசலில் சூடம் கொளுத்துகிறவனைபோல் புன்னகைத்து போகிறாய். உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்பதைக் காட்டிலும் அதிகமாய் நேசித்தும் தொலைக்கிறேன் என்பதே என் பலகீனமும். 

வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதே இல்லை.வலியின் வசீகரம் நிறைவு பெறுவது பிறகான முத்தத்தில் என்பதை அறிந்து வைத்திருக்கிறது உன் பற்களும் உதடுகளும். ரீசார்ஜ் அட்டைகளின் வெள்ளீ முலாமை சுரண்டுவதைப் போல் அத்தனை எளிதாய் இருக்கிறது உனக்கு என் தோல் உரிப்பது .ஒரு மலையுச்சியினின்று வீழ்பவனின் கதறலுடன் சொல்ல விரும்புவதெல்லாம் எப்பவும் போல் உன்னை நேசிக்கிறேன் நான் -ஐயும்  அதிகமாய்

                                                                                                                                     (தொடரலாமா)

மீள் வருகை

ஒரு பெருந்துயரை 
பிளிறும் குரலில் மரண வீடு
தோறும் அழும் ஒப்பாரிப் பெண்
விசும்ப மட்டுமே முடிகிற வீடாய்
இருக்கிறது நீயற்ற உன் அண்மை

உனதின்மைகளில் உறங்கிப்
பழகிய பூனை உன் மீள்வருகை கலவிகளில்
கதவு பிறாண்டியபடி இருக்கிறது
எவ்வளவு துரத்தினாலும் நாவறண்ட
குழந்தையின் அழுகைக்குரலுடன்  

உள்ளழைத்துக் கொண்ட பவள மல்லி மரத்தில்
இரவுகளில் பூவுதிர்த்தபடி கிடந்த கற்பும்
வெப்புத் தாளாமல் குழி பறித்துறங்கும் நாய்க்கு
கொடுத்திருக்கும் குளிரும்
கம்பளிப் பூச்சிகள் அப்பிய முருங்கையாய்
தின்னக் கொடுத்தபடி

கர்த்தனே உயிர்தெழுப்புதலற்ற
சிலுவையில் அறைந்து போ

Sunday, July 25, 2010

செப்பு மொழி

புத்தனைக் கொன்ற குருதியில்
பூப்பெய்திய காதலை

ஒரு தகன நெருப்பில்
தழைக்கத் துவங்கும் ஞானத்தை

மகரந்தம் ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின்
உணரிகளின் அசைவை
எழுதிப் பார்த்த கவிதைகளை

தனிமையின் இன்மையை
பேசித் தீர்க்கும்
பின்னிரவுக் குயிலின் பாடலை

எலும்புகளில் தீ சுரக்க வைக்கும்
தருணத்தை பரிசளிக்கும் தப்பிதங்களை

நட்பின் துரோகத்தை
பிரியங்களின் வன்முறையினை
உலர்ந்த நதியின் படுகைகளில் ஆழ்
துளையிட்டு நீருறிஞ்சும் பாவனையில்
பொருள் வயிற் பட்ட வாழ்வின் கோரங்களை

ரேகைகளை எழுதும் கருவறை மோனத்தில்
கல்லெறிந்த புத்தகங்களை

வாதையை வலிந்து துய்க்கும் மின்மயான மனசை
 மிருக வாசனை மாறாத புணர்வின் கீறல்களை

கொப்பளிக்கும் உலோகக்குழம்பாய்
கண்மாறும் வதை தெறிக்கும் நிமிடங்களை

வசீகர பொய்களை
மரிக்கும் ஆணின் உடல் கசிய விடும்
கடைசித்துளி விந்தை
வாடகைக் கருவறைகளை

திரிந்த காமத்தை
தீராத அன்பை

செப்பிடு வித்தை