Thursday, December 30, 2010

உதிர பாகினி

காதுகளில் எலும்பு கூடாத


மழலை ஒன்றின் கபாலத்தை

அணிந்திருந்தாள்



அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம்

ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன்

கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள்



பெரு மகிழ்வுடன் ஏந்தினேன்

உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன்



நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள்

அறைந்தாள் காணீர்



அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம்

பாதி கல்லான மரத்திலிருந்து மேலெழும் பறவைகள்

அவள் ரோமக் கால்கள்



காதலையுணர் உன் கர்ப்பப்பை

என் புறம் நாரி

சிற்றகல் சுடர்

உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்


கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்

அளந்து பதியும் பாதம்

ரோமக் காலிடையே மூச்சு



மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்

பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன

தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய



மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி

பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை

காற்றும் சப்தமும்

வேர்கள் நீருறுஞ்சும்


மௌனக் கிசுகிசுப்பை

மழையருந்திப் பறவைகள்

சப்தம் பெயர்த்து இலக்கணம்

இயம்பின



மரங்கொத்திப் பறவைகள்

விரும்பித் துயிலும் மரம்

மீன் கொத்திகளின் கனவிலிருந்தது

ஏந்திய கரங்களுடன்



மாங்குரோவ் காடுகள்

பறவைகள் கண்டம் கடக்க

விண்ணெழும்பியதும்

அலை சப்தம் சுருதிப் பிசகாமல்

ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது



பறவைகளுக்கு மரமும்

மரங்களுக்குப் பறவையும்

காற்றும் சப்தமும்