Wednesday, November 30, 2011

நப்பின்னைக்கு ...




ஈன்ற பொழுதின் உதிரங்கழுவாத அந்தி
முதல் சொட்டுக்கு 
கண் திறவா குன்றிலிருந்து 
இறங்குகிறது மேய்ச்சல் முடிந்த 
பிட்டி பச்சையத்துடன் 
வெள்ளாட்டுக் கிடை 
சுவாசிக்கிறாள் 
தாவணி நிலவுலாவு 
நீர்மலி மேனியாய் அசைய 

அடைகாக்கும் சர்ப்பம்
அரவம் கேட்டு விரித்த படம் 
குவிகிறது ஐயம் தீர்ந்து 
தளும்பி தளும்பி ஏறி விடுகிறது 
படிக்கட்டில் மாரிக்கால குளம் 

ஆரஞ்சு நிற சிலேட்டின் கடிப்பட்ட 
பற்தடம்
புரள்கையில் விலகுகிறது 
கொலுசு 

வாழைப்பூவுக்குள் 
ஒளித்திருக்கும் விரல்களை 
திறக்கத் முடிகிற அணிலை 
காணக் கூடுவதில்லை இப்போதெல்லாம்
காதுக் கம்மலுக்கு 
தெரிந்திருக்கிறது குளியல் சோப்பை 
நகக்கண்ணில் வைத்துக் கொள்ள 
எவ்வளவு முயன்றாலும் 
முடிவதில்லை உதடுகளுக்கு



Sunday, November 13, 2011

அது ....!

கொஞ்சம் தவிட்டு வாசம் 
மீதமுள்ள
பதனிடப் பட்ட தோலுறையில் 
இருந்து உருவுகிறீர்கள் 
கழுவப் பெற்ற குழந்தையின் 
ஈரக் குழல் போல் மின்னுகிறது 
அது...

குற்றங்களை பட்டியலிடுகிறீர்கள் 
மேதமை மிளிரும் 
உங்கள் மொழியில் ,இடையிடையே 
மீசையை நீவிய படி .. 
முன்னால் இருக்கும் மர மேசையில் 
அனிச்சையாய் ஏதோ ஒரு பெயரின் 
தலைப் பெழுத்தை கீறுகிறது 
கூர் நுனி 

மறுதலிப்பதற்கான
ஷரத்துகளின் உட்பிரிவுகள் 
முதற்கொண்டு மனனம் 
செய்த குரலில் ஒப்பிக்க முடிகிறது 
உங்களுக்கு 

தன் பிழையால்
மரித்தவள் கணவனுக்கு 
துளி நடுக்கமும் இல்லாமல் 
ஒரு தேர்ந்த மருத்துவன் 
பதிலுறுக்கும் சாயலில் 

உங்கள் வாக்கியங்களுக்கான
முற்றுப் புள்ளிகளை 
மேசையில் வைத்தபடி தொடர்கிறது 
கம்பளிக்கு வளர்ந்த ஆட்டின் மீது 
நகரும் எந்திரமாய் உரையாடல் 

விசாரணை முடிந்ததென்றும் 
என் பெயர் மரித்தவர் பட்டியலில் 
இணைக்கப் பெற்று விட்டதாகவும் 
எனக்கான உங்களின் நியாயச்சலுகைகள் 
தீர்ந்ததென்றும் அறிவிக்கிறீர்கள் 

உங்கள் உதவியாளரிடம் 
பிரேதப் பரிசோதனை முடிந்து 
ஒப்படைக்கும் உடலைப் போல் 
தீர்ப்பெழுதி கையெழுத்திட்ட கோப்பினை
கையளிக்கிறீர்கள் ,
மீண்டும் உறைக்குத் திரும்புகிறது 
நூற்றாண்டுகளுக்கு முன் உதிரம் 
கண்ட அது 


அறுந்து போயிருந்த மின்சாரம் 
மீண்டும் வருகிறது 
அணைக்க மறந்த விசிறியால் 
அறை மூலை ஒட்டடை அசைகிறது 
அறிதுயிலில் இருக்கிறது 
சிலந்தி அசைவேதுமற்று

Wednesday, November 9, 2011

எழுதுதல் என்பது ...


நதிக்கரையில் அமர்ந்துகொண்டு
உயிர் தவளைகளை நிறுப்பவன்

பிளந்து தைத்து மம்மிகள் போல்
சுற்றித் தரும் உடலின் கை மடிப்பில்
நேர்த்தி ஓர்பவன்

மைக்ரோ டிப் வந்த பிறகும்
இன்னும் ஷார்ப்னரில் திருகிய
புதுப் பென்சிலின் முதல் சீவல்
மரச் சுருளை பத்திரப் படுத்துகின்றன
குழந்தைகள்

எப்போதேனும் ஊர்வரும் விடுமுறையில்
இப்பவும் குடுகுடுப்பைக்காரரிடம்
கால் மணி நேரம் பேச இருக்கிறது
முன்னாள் காதலிக்கு

கழிவுகளை கட்டிக் கொடுத்தபிறகு
இப்பவும் மறக்காமல் சூடம் கொளுத்துகிறார்
கறிக்கடை சென்றாயப் பிரபு

பாட்டன் மரணத்தை மனைவியிடம்
 மறைத்து இன்னமும் ட்ரான்ஸ்பரில் ’ஹோம்’க்கு
பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான் யாரோ
ஒரு பேரன்

கடைசி கண்ணிப்பூவை
ஒரு தூண் சிற்பத்திற்கு சூட்டி
கண்படாத தனித்த கணத்தில்
முத்தமிட்டு விரைபவள்

இன்னமும் கவிதைகள் எழுதுகிறவனையும்
வாசிக்கும் உங்களையும் போல

Tuesday, November 1, 2011

ஞாபகம் என்பது நத்தையின் ஓடு

தனதன்பை பகடி செய்தவர்களிடம் 
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது. - Siddharth Venkatesan 


ஞாபகம் என்பது நத்தையின் ஓடு 
துகிலுரித்து கொண்டிருக்கும் 
சர்ப்பத்தை கடக்கும் வரை 

மீனுண்ணும் தாய்மீனின்
முட்டைக்குள் மீண்டும் கருவாகுமோ
முன் கொண்ட மகவு 

பொற்கோழியோ
நற்காகமோ 
அடைகாக்க மட்டும் 
அறிந்தவை பறவைகள் 

லோகிதாசனின் பிணக் கூலியாய் 
அன்பு
காணப் பெறும் கண் சார்ந்து 

தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது

Saturday, October 1, 2011

முத்தம்

தாள் துளைப்பானின்
கர்ப்ப சேமிப்பாய் எத்தனைப் பௌர்ணமிகள்
காத்திருப்பு ஓர் முத்தத்தின் நிமித்தம்

உதிரங்கசியும் கள்ளிப் பழச் சுவை
கூதிர் காலத்து உதட்டில்

ஆலங்கட்டி மழைக்குப் பின்னான
பூங்கொத்து அங்காடி

X வடிவ அலுவல் அவசர முத்தங்கள்
பசிக்கு திறந்து கீச்சிடும்
அந்திக்கூட்டின் பிஞ்சு அலகுகள்

Y கவ்விய முத்தத்தில்
மிருதங்கத்துள் தவறி
நுழைந்த எறும்பென உடல்களிடையே
கேரம்போர்டின் சிவப்புக்காய்
ஆகும் துணை கேட்கும் உயிர்

சகி
முத்தம் தொலைநகல்
பிரதிப்படாவிடில் தேய்ந்தழியும்

Saturday, September 17, 2011

நான் பிணவறைக் காப்பாளன்



நானொரு பிணவறைக் காவலன்
தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன்
தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம்
சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள்
தீக்குளித்த உடல்கள்
உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள்
தூக்கிலிட்ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து
பெண்களுக்குள் உறைந்த விந்து
சீழ் நுதல் நாற்றம் நரை
திறந்த விழிகள் மடங்காத விரல்கள்
வளரும் நகம் வளரும் மயிர்
புணர்ச்சி கீறல் காயம் மாயம்
காசு மாசு லஞ்சம்
ரச்புடின் பிரகாஷ்
கர்ப்பவதி கைம்பெண்
நீரால் காரால்
ஊழி மூளி
நான் பிணவறைக் காவலன்

பிணங்களே இல்லாத நாளில்
நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்
முன்குறிப்புகளோடு

Friday, September 9, 2011

சல்லடைநிழல்

எவள் விட்டுச் சென்ற கொலுசின்
ஞாபகத்தில் நுரை கோர்த்திருக்கிறது
நாணல் நதிக்கரை

முகம் பொத்திய எந்த முந்தானையின்
வாசத்திற்கு தரை தடவிக் கொண்டிருக்கிறது
இக்கிளையின் சல்லடைநிழல்

எந்த உதட்டுக்கான முத்தத்தை
நீர்தளம் தொட்டு காற்றில் பறக்க
விடுகிறது இம்மீன்

யார் சாம்பலை கரைத்து விட்டு
எலும்பை நழுவ விட்ட இப்பாண்டத்தின் சில்லில்
வந்தமர்கிறது இந்த தட்டான்

Monday, August 29, 2011

மத்தகம்

மத்தகத்தின் மீது பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிக்கு பெயர் வெட்கம்

அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால்
பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது
மரணத்தை

வாலுயர்த்தி வானம் சுட்டி
கோளம் கொறித்து
உலகம் விழுங்க முயல்கிறது
அணில்

காகப் பொன் மினுங்க
கிடக்கும் வண்டல்
மீது அமர்கிறது தட்டான்
சிறகு தாழ்த்தி

தம் பருவத்தை
தானுணர்தல் ஆணுக்கு
வாய்ப்பதில்லை
ஒரு சிறுமியைப் போலே
அத்துணை நுட்பமாய்

(தான் பருவமெய்திய நாளை,நாழிகையை நினைவிறுத்தி மெதுவெப்பம் படரச் சொல்கிற மனைவி போல் சொல்லத் தெரியாத கணத்தின் சொல் வளர்த்த கிளை இக்கவிதை(?) )

Sunday, August 14, 2011

கிகலோவின் டைரிக் குறிப்புகள்

புனித நரகத்தை உழுத போது
கிடைத்த வெட்டு பட்ட நாணயம்
பூவிழுந்த உன் கருவிழி

*****************
நண்பனை புதைத்த நாளில்
அழிந்தது கரு வாசனை
நல்ல தவளையானேன்

**********************
சுண்டிய உதிரம்
நிரம்பியிருக்கும் ஆஷ்ட்ரேயில்
வெட்டிய நகம் போல்
உதிர்ந்து கிடக்கிறது
நாளை -மறு -நாள் இரவுக்கு
நிரல் செய்த வாடிக்கையாள
எண்ணெழுதிய காகிதம்
*********************
வீட்டுத் தேனீக்கள்
சேமித்துக் கொண்டே இருக்கின்றன
எச்சிலை விரும்பி உண்ணும்
உதடுகளுக்காக

*********************

Wednesday, July 13, 2011

உனக்கு எப்படி புரிய வைப்பது

நீ தட்டானாகி அமர்ந்து
சிறகு குவிக்கும் புல்
உன்னைப் புதைத்த கல்லறை

நீ புகட்டி வளர்த்த கனவுகள்
உனக்கெதிரான சாபங்களாய்
செல்பேசி எறிந்து 
பேட்டரிகளாய் கழன்று கொண்டிருக்கின்றன 

உனது புகைப்படத்தின் ஓரங்கள்
பழுப்பேறி விட்டன 
உனக்குத்தெரியுமா
நீ போற்றி மறைத்த நரை
தெள்ள வெளுத்த தருணக் காட்சியுடைய 
படம் அது 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
நீ இறந்து விட்டாய்

வாழ்வைப் பிணை வைத்த
ஒரு நம்பிக்கை பொய்க்கும் போது
இல்லாமலே மரிக்கும் கடவுளைப் போல 

போல போன்ற எல்லா போலகளும்
அழிந்து விடும்
விற்கப்பட்ட சிறுமியின்
பிறப்பைப் போல 

ஒரு ஆழ்ந்த காயத்தின் 
தையலாய் 
பிரிக்கப் பட்டு விட்டாய் 
நீ 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
அதன்பின் நானும் இரண்டு முறை 
இறந்து விட்டதை

( என்றும் )


அல்லது ..

இந்த கிரகம் இனி நமதல்லவென்பதை 

( என்றும் )

கழிவறைக் கூடையில் 
உன் அதீத அன்பு கருமையேறி 
வில்லைகளால் பின்னமுற்ற நாளில் 

( விரும்பியவாறு வாசித்து முடிக்கலாம் தலை கீழாய் எழுதப்பட்ட இந்தக் கவிதையை.. ) 

:)

Sunday, May 29, 2011

அதீத அன்பும் எச்ச பீடியும்

அலார வாழ்த்து,மகன் போன் நடிகை
எம்.எமெஸ்,அடுத்த நரகாசுர வேட்டையில்
 எஃப்.பி.ஐ... வாசகர்
கடிதத்திற்கு கஸ்டமர் லிஸ்ட்,சேகரோ,
ஆனந்தோ,முசல்மான் பேர் ஜாக்கிறதை,
லிஜெண்ட்,போலி,புரவலர் ,புலவர்,
பொறாமை-மைறாப்போ,
நீராடும் கடலுடுத்த டாஸ்மாக்கில்
மூன்றாம் பெக் நாத்திகன்,பான் கீ மூ,ஐ.நா ,
கொல்லணும்டா
அந்தத் .......

வக்கில்ல,ஐ பிஎல் முத்தம்,
வி ஆர் நோ மோர் கபிள்ஸ்,யாபா,பாபா,
6 ஆம் நம்பர்,டார்கெட் ரெவ்யூ,ப்ளடி ஃபக்கர்
லிப்ட்ல கை போட்றான்டி,பொன்னகரமென்று
கதைக்கிறீர்களே ஐயா,ஓஎமார் ப்ளாட்டு,பிகோ
2011,சாமுத்ரிகா ப்ரைடல் கலெக்‌ஷன்


தூய அன்பு ,அதீத அன்பு,பாலித்தீன் மழை,
எச்ச பீடி ,மாய்மாலம்,மஸாக்களி,
ரெண்டா போட்டுக்க இன்னிக்கு கட்சீ நாளு,
கடவுளிருக்கான் கொமாரு


Thursday, May 5, 2011

குவியம்

பேணிய மயிற்பீலியுதிர் இழையொண்ண 
நாணி கீறுஞ் செங்கண் கவிந்து அகல் கொள்
வானின் நிலவுண்ட துளி யொப்பி சீம்பால் அகம்
தூணின் சித்திரமேவு புகைத் துகில்

Thursday, April 28, 2011

ஊமை வெயில்


குற்றேவல் சேடியாய்
வந்து போனது மழை
மரத்தின் நிழல்வெளி செருப்பும்
நனையாமல்

ஊடல் மனைவியின்
கோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி
திரும்பிய  விரல்களின்
தயக்கத்துடன்

மின் விசிறி நாவு மேவிய தூசாய்
விரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்

எடுத்து விட்ட விரலை  மீண்டும் வைத்துக்
கொள்ளும் தூக்கக் குழந்தையாய்
இரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன
சந்தோஷம்

படம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்   

Sunday, April 24, 2011

தேகம்


ஓவியத் தாள்களை கணப்பு அடுப்பு
தின்னக் கொடுத்தாயிற்று அதிலிருந்து கசியும்
வர்ண வாசனை மரத்துப் போக  புகைத்தபடி

உறை பிரிக்காமல் நடுங்கும் கரத்துடன்
எதிர்வீட்டு இளைஞனுக்கு கொடுத்துவிட்டு
அனுமதியோடு விரல் பதிய அறைந்தேன்
நன்றியும் செத்துப் போக
இராவண வயலின்

காப்பீட்டு பத்திரங்களையும்
கத்தரித்த கூந்தலையும்
நாப்கின்னோடு வீசியாயிற்று

சப்தங்களில் இருந்து தப்பிக்க
எப்போதும் கூடுவதில்லை
நீருள் மூழ்க
அரிந்து வீசிய கருப்பை போலும்

ஏது செய்ய
புணர்ந்த தேகத்தை... ?

Friday, April 22, 2011

பால்ய நகரம்

குடிக்கூலி தவணையுள்ள
வீடுகளைப் போலவே 
விபத்துகளின் உதிரஞாபகமும்

ஆல்கஹால் இரவில் தையல் கிழிந்த
வயிறாய் 
உலோக நகம் திறந்தபடியே
இருந்த ஆறும் காயத்தின் கருப்புள்ள
சாலைகள்

எஸ்.டி.டி பூத்துகளில் முடிந்த
பண்டிகை நாட்கள்

மாத இறுதி கையிருப்பில்
இருக்கும் கிழிந்த நோட்டாய்
காதல்

ரிக்டரளவு மீறிய நாளின் 
மீன்தொட்டியாய்
இன்னும் நடுங்கும்
ஜன்னல்வழி பார்த்த கொலையிரவு

பெயர்க்கப்பட்ட வீட்டின் ஜன்னல் சட்டத்தில்
சாயமற்று கிடக்கும் யாரோவின்
ஸ்டிக்கர் பொட்டு 
இன்னும் மீதமிருக்கும்
நங்கூரங்களின் புன்னகை



(என்றைக்குமான அன்புடன் க.அன்புவேலுக்கு)

Monday, April 18, 2011

செய்தி வாசிப்பாளினியும் அஜினோமோட்டோ முத்தங்களும்


கொதிகலன் மூழ்கிய பிராய்லர் கால்களாய்
விசிறிகளசையும் காற்றாலைக் கரையில்
கடற்பஞ்சு தைத்த உள்ளாடைகள் மீது
உதடு கவ்விய ப்ளாஸ்டிக் தும்பிகள்

அலைக்கற்றை ஈந்த ப்ளாக்பெர்ரி கனியின்
டங்ஸ்டன் நார்கள் நீலப்பல்லிடுக்கில்,
பர்கர் இடைவேளையில் தோற்கும்
சந்திராயன்

கொக்கோ விவசாயி
மலங்கழிக்க இரண்டு கிலோ
அரிசி அல்லது இரண்டு நிமிட
செல்போன் ஊனம்

விந்தை மட்டும் விலை தந்து பெறும்
இலவச ’காலனியர்’ பரந்துள்ள ஊரில் 
நைட்டி(ங்)கேல் சாமியார்
சமாதி நிலை வகுப்பெடுக்கிறார்

லேகிய வியாபாரியின் மூலிகைக் கனவில்
காளான் பண்ணை

Thursday, April 14, 2011

அக்கா...!

          இன்று நெருங்கிய உறவினரின் மரணம் நிகழ்ந்தது.அக்கா ,அக்கா என்று சுற்றிச் சுற்றி அதே நினைவு.மயானம் வரை வசமிழந்த கண்கள் .வெகு உற்சாகமாக துவங்கிய நாள் பேரதிர்ச்சியுடன் முடிந்தது 38 வயதெல்லாம் சாகும் வயதா :(

            2ஆம் ஆண்டு பொறியியல் பயிலும் அவர் மகனை அழச் சொல்லிக் கெஞ்சினேன் ,வெறித்த பார்வையுடன் மாலை வரை துளிக் கண்ணீரும் சிந்தாமல் கிடந்தவன் தன் பால்ய சிநேகிதன் வந்து நம்ம அம்மாவுக்கு என்னடா ஆச்சு என்றதும்... வெடித்து உடைந்தான்.மிக மோசமான பாதுகாப்பின்மையை மரணங்கள் மனிதரிடையே பரவ விடுகின்றன,இனி சகலரையும் நேசிக்க மட்டுமே வேண்டும் என்றும்

                       பெருவெளியில் நிரந்தரமாக கலந்து விட்டது இன்னொரு வெளிமூச்சு,எல்லா தத்துவங்களும் அத்துணை தேற்றுதல்களும் ஒரு விசும்பலில் துகள்களாகித் தெறிபடுகின்றன.தன் முன்னிருந்த அத்துணை சாத்தியங்களையும் முயன்று வெற்றுடலை சுமந்து வந்த அந்த மனிதன் ஒரே இரவில் தொழிலால் 65 லட்சம் இழந்தவன்,தொடர்ந்த வருடங்களில் தகப்பனையும் தாயையும் ...4-5 வருடங்களுக்குள் அத்தனையும் .. இனி அந்த வீட்டில் பகல்களில் வரும் பூனைகள்... முதல் கவளச் சோறுண்ண வரும் மொட்டைமாடி காகங்கள்... அந்த தென்னை மரத்தின் கீழ் சிதறிய பருக்கைகளுக்கு வரும் அணில்... எம்புட்டு தின்னுரப் போகுதுக .வெரட்டாத ஆத்தா என்று காயும் தானியங்களுக்கு வரும் குருவிகளுக்கு யார் கொள்ளுவார் கரிசனம்...

               சாப்பிடும் பொழுதுவரை பேச்சை நகர்த்தும் லாவகம் அறிந்திருந்தாய் அக்கா . உனக்கு மட்டுமே தயாரித்து ஒரே பாண்டத்துடன் தீர்ந்து போனாற் போன்ற வேறெங்கும் காணா குட்டிக்குட்டி கிண்ணங்கள்.எப்போது மோர் வரும் என்று காத்திருக்க வைக்கும் வீடு உனது.உணவை இத்துணை நேசித்துப் பரிமாறும் வீடுகள் அரிதினும் அரிது அக்கா.எனக்கு நீதான் பெண்பார்த்தாய் .இந்த மரணம் உன் வாதைகளில் இருந்து நீ கொண்ட விடுதலை என்பதில் ஒரு மெல்லிய ஆசுவாசம் படரத்தான் செய்கிறது.இறந்த தம்பியின் மனைவிக்கு தாயின் இடத்தில் இத்துணை வருடங்களுக்குப் பின்னும் நீண்டபடிதான் இருந்தது கரம் அந்த சிறுமிக்கான நகைகளை சேமிக்கத் துவங்கி இருந்தாய்.ஒவ்வொரு முறை அயல்தேசம் கிளம்பும்போதும் வரும்போதும் சொல்லிக் கொள்ள எடுத்துக் கொள்ள உன் வீட்டு வாகனம் நின்று கொண்டிருக்கும். அக்கா ... இடம் மாற்றும் போது சுமக்க நேர்ந்திருக்க வேண்டாம் அக்கா.உன் முகம் இது வரை பார்த்தே இராத சௌந்தர்யப் புன்னகையுடன் ஒளிர்ந்தது.என் கவிதைப் புத்தகத்தை நீ வாங்கிப் போன அந்த மாலையில் மீண்டும் உன் கண்களில் பால்யத்தை பார்த்ததைப் போலவே ...

          ஒவ்வொரு வருகையிலும் என் வீட்டு பதனப் பெட்டியை நிரப்பிப் போவதில் துவங்கி என் வரவறிந்து சமைத்தனுப்பும் நாட்களும் இனி ....
உனது வாக்கியங்களை அப்படியாமே ? என்று துவங்கும் லாவகம்.. பிறகு என்று உரையாடலை நீட்டுவிக்கும் சொல்லோடு நீ தரும் மௌனம் ... எங்களுக்கும் விளங்குற மாதிரி அடுத்து வர்ற புஸ்தகம் இருக்கணும் .சரியா .. ? என்று கேட்ட குரலின் தண்மையும் ஒரு புறம் சாய்ந்த பார்வையும் .அக்கா ! உன் மகனிடத்து வாக்களித்ததைப் போலவே அவனது தேவைகளில் என் இருப்பு நிச்சயம் இருக்கும்.இனியான என் சொற்களில் நின் நினைவுகளும்

            அழுது வீங்கிய கண்களுடன் அடர்ந்த கனவில் இருந்து அக்கா,இப்போ அக்கா என்கிற என் மனையாளின் சிலிர்த்து விழித்த நிமிடம்தான் அக்கா நீ விட்டுப் போயிருப்பது,நீ இல்லாத வீட்டிற்குள்  நுழையும் திராணி குறித்த என் நடுக்கமும்.உன் வீட்டில் இருக்கும் உன் மகனின் இரவுணவு முடிந்ததென்ற சேதி சொல்லும் என் அம்மாவின் அன்பும் ..நீர்த்திரை கட்டும் இந்த கண்கள் எழுத விடாமல் இம்சிக்கின்றன அக்கா.சிறு வயதில் நீ ஒளிந்து கொண்டால் மட்டும் கண்டு பிடிக்க முடிந்ததே இல்லை அக்கா.நீ போர்வை போர்த்தி கட்டிலுக்கு கீழ் அல்லது உறங்கும் யாரேனும் அருகில் இருப்பாய்.கண்டறிய இயலாமலே முடிந்து விடும் விளையாட்டு,இன்றும்.....

உன் ஆன்மா அமைதியில் ஆழ்க!நீ ஸ்தூலமாய் வாசிக்கக் கூடும் என்ற அசட்டு நம்பிக்கையுடன்...

Tuesday, April 12, 2011

கடவுச் சொற்கள்

ரேகையழிந்த கரங்களால்
தொடுதிரையில் தெரியும் பெண்ணை
திறந்து பார்ப்பதால் திருப்தியுறுவதில்லை
நடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து
தோற்கும் உடல்

வேண்டியிருக்கிறது திருடப்பட்ட உள்ளாடைகள்
வேண்டியிருக்கிறது மார்பிங் நிர்வாணங்கள்
வேண்டியிருக்கிறது திரையரங்க இருட்டு
வேண்டியிருக்கிறது நெரிசல் பேருந்துகள்
வேண்டியிருக்கிறது கடவுளர் கொண்டாட்டங்கள்
வேண்டியிருக்கிறது தாய் சாயலில் தாசியர்
வேண்டியிருக்கிறது யாசிக்கும் திருநங்கையர்
வேண்டியிருக்கிறது தற்கொலைத்த புகைப்படங்கள்
வேண்டியிருக்கிறது திசை தப்பிய சிறுமிகள்
வேண்டியிருக்கிறது பரிசோதனைக்கு வரும் பிரேதங்கள்

மற்றும்

சித்திரம் வரைந்த கழிவறைகள்
ஒட்டுக் கேட்க முடிகிற தொலைபேசிகள்
ஒருக்களித்த ஜன்னல்கள்
சித்தரித்துக் கொள்ள ஏதுவாய்
தகப்பனோடேனும் பேசிய மின்னுரையாடல்கள்

இச்சித்தும் அனிச்சையுமாய்

நேர்ந்து விடுகின்றன வல்லாங்கப் படுதல்
நேர்ந்து விடுகின்றன கருக்கலைப்புகள்
நேர்ந்து விடுகின்றன பிரிவறிக்கைகள்
நேர்ந்து விடுகின்றன உந்தப் பட்ட மரணங்கள்

ஒரு போதும் கூடுவதில்லை

மெய்நிகர் மெய்யாகவும்
விந்து கருவாகவும்
ஆதலால்
தம் பிள்ளைளை தமதாகவும்
தாமே தமதாகவும்

சாமர்த்தியமாக எழுதப்பட்ட
கடவுச்சொல்லாய்
எண்களாலும் சொற்களாலும்
ஆன உடலை
எரித்துக் கொள்கிறார்கள்
மிக ரகசியமாக

நைந்த உறை
கிழிந்ததறியாமல் நோய்கண்ட
உடல் கூடும்
நிழலாக

(நன்றிகளுடன் அனானிகளுக்கு ...)

Monday, March 21, 2011

மற்றும்... ஃ

 சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...


பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள் 
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்

சொற்ப தானியங்களுடன் இறுதி நாள்
நுரைப்பஞ்சாய் சாயமுறுகிறது
வரிக்குதிரையின் கருவில் தோல்

பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும்
நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும்
அல்லது ஆல்பா,பீட்டா ....


தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற
உடல்நலத்துடன்..,
காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து
ஒரு எளிய பகல்

Thursday, March 17, 2011

செண்பக வனம் - சில குறிப்புகள்

மிருக செட்டைகளின் கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

வெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின் 
பாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை

முதலுயிர் நுகர்ந்த பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும் 
கடைசியுதிரம் உமிழும் மோனோபஸ் கருப்புதடுகள்
மிளிர சுனை

சமிக்ஞை மெல்லொலி இசைச் சிலந்தி உமிழும் ஒளியிழையில்
வனம் பாலிக்கும் ஏந்தியகரமாய் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்

பேறு காலப்புணர்வில் ஆண் திருடும் தனத்து மிடறாய் 
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு 
அவள் நாசி முடிந்து பசியவாயில் வழிந்து 

அரப்பில் சிகைகழுவிய உகிர் ,இலை மேலொளிர் பகல்
யானும் 
பெய்யும் இருதுளியிடை தூரத்தில் 
எம்பாவையரும்

Friday, February 25, 2011

தொப்பி தூக்கிப் பாறை



ஆகாயத்தின் மேல் படிந்திருக்கும்
இமையின் கீழ்

கடைசி சொட்டு மதுவிலிருந்து
அசுத்தமாகும் யாரோவின் உலகம்

நடன எட்டுகள் மறந்த சிறுமியின்
ஆடை அசைப்பில் நிரம்பும் பாடல் கணம்

பணயக் கைதியின் கனாவில்
வரும் மனைவியின் பிரசவம்

என்கௌண்டரில் தரையில்
சுடப்படும் புல்லட்டுகளால்
மூக்கொழுகும் பளிங்கு கோப்பைகள்


நாள் தப்பிய பெண்ணிடம்
சுக விடுதியின் பின்னறை கேள்விகளில்
எச்சில்படும் பெயர்கள்

சர்வ ஜாக்கிரதையுடன் மீண்டும்
 காலி செய்து கவிழ்க்கப் பெறுகிறது
இமை- கோப்பை  மற்றும் ..... 

Thursday, February 17, 2011

வரிக்குதிரையின் கனா

ரீங்கரிக்கும் சில்வண்டுகளின்
ஸ்தாயிதனைஅறுக்கும் கூகையின் குரல் 
அடவியின் இடுக்குகளில்
உறங்கும் சர்ப்பங்களில் நிகழ்த்தும் சலனம் ,

கைவிலக்கும் தாயின் கரத்தை இழுத்து
வைத்துக் கொள்ளும் சிறுமியின்
கனாவில் நடன வகுப்பில்
இறுக்கிக் கொள்ளும் இடையாடை ஞாபகம்.

அதிர்ந்து கொண்டிருக்கிறது செல்லிடப் பேசி,

டோராவும் புஜ்ஜியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
ஆலிஸ் -இன் அற்புத உலகில்
அடுத்த கிரகத்தில் புலம் பெயர்ந்த
தந்தையுடன் தாய்
இன்னும் இறுகும் கரத்துள்
நெளிகிறது பிஞ்சுவுடல்

இராவண கண்ணியம்



கழுவேற்றுதலின் சுவாரஸ்யத்தில் 
இருந்த உனக்கு கேட்கவே இல்லை
மடலேறும் பறை

உண்ணிகள் களைய எப்பவும் நீட்டும் 
கழுத்துதான் 
நீதான் ஆபிரகாம் பலி பீடத்தில் 

கொன்று செய்த பீலி சாமரம்
வெட்சி வாசம் படர்த்தும் 
உன் மாளிகையில் 

யட்சனின் குளம் 
அரவானின் மனசு
கனாச் சடலங்கள் கரையெங்கும் 

கல் அகலிகை
சுமந்து வந்திருக்கிறாள் அண்டைச் சிறுமி
சிற்பம் செய்து தரச் சொல்லி